
தாமசு ஆல்வா எடிசன் (பெப்ரவரி 11, 1847 – அக்டோபர் 18, 1931) ஒரு அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபரும் ஆவார். இவர் ஒளி விளக்கு, ஒலிவரைவி, திரைப் படக்கருவி உள்ளிட்ட பல கருவிகளை உருவாக்கினார். "மென்லோ பூங்காவின் மேதை" என்றழைக்கப்பட்ட எடிசன், திரள் உற்பத்தி, ஒன்றுபட்ட பெரிய குழுப்பணி ஆகிய கோட்பாடுகளைப் பயன்படுத்திய முதல் கண்டுபிடிப்பாளர்களுள் ஒருவர். இவர் சாமுவேல் எடிசனுக்கும் நான்சி மாத்தியூஸ் எலியட் என்பாருக்கும் கடைக்குட்டியாக பிறந்தார். 1880 ல் எடிசன் அறிவியல் சார்ந்த பத்திரிகை ஒன்றை ஆரம்பித்தார். இது 1900 ஆவது ஆண்டில் அறிவியல் முன்னேற்றத்துக்கான அமெரிக்கக் கழகத்தின் (American Association for the Advancement of Science) பத்திரிகை ஆனது.
தனது பெயரில் சாதனை அளவான 1093 உரிமங்களைப் பதிவு செய்த எடிசன், பெருமளவு கண்டுபிடிப்புக்களைச் செய்தவர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். இவற்றுள் பெரும்பாலானவை இவரால் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல; முன்னைய உரிமங்களில் ஏற்படுத்திய சீரமைப்புக்களாகும். இவையும் பெரும்பாலும் இவரது பெருமளவிலான ஊழியர்களால் செய்யப்பட்டவை. இக்கண்டு பிடிப்புக்களுக்கான பெருமையில் மற்றவர்களுக்குரிய பங்கைக் கொடுக்காதமைக்காக எடிசன் அடிக்கடி விமர்சிக்கப்ப்ட்டார். இருந்தாலும், எடிசன் ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளில் உரிமங்களைப் பெற்றார். எடிசன் நம்பிக்கை நிதியம் (Edison Trust) எனப் பொதுவாக அறியப்பட்ட, ஒன்பது முதன்மையான திரைப்படக் கலையகங்களின் கூட்டமைப்பான அசையும் பட உரிமக் கம்பனியை (Motion Picture Patent Company) ஆரம்பித்தார்.
குடும்பநிலை
தாமசு ஏழ்மையான குடும்பத்தில் பிறக்கவில்லை; அவரது பெற்றோர் நடுத்தர வகுப்பினர். தாமசு பிறந்த போது (1847) அவரது குடும்பம் ஓகையோவிலுள்ள மிலனில் வசித்து வந்தது. பின்னர் அவர்கள் மிச்சிகனிலுள்ள ஊரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தனர்.
படிப்பு
பள்ளியில் ஏழு வயதுச் சிறுவனான தாமசு ஆசிரியரைக் கேள்விகள் கேட்டுத் துளைத்தெடுப்பாராம் - ”குழப்பவாதி” என்று கூறுமளவிற்கு! ஆனால், தாமசின் தாயார் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். எனவே, பள்ளியிலிருந்து தாமசை விலக்கிவிட்டுத் தானே அவருக்கு பாடங்கள் சொல்லிக் கொடுத்தார் - மூன்று ஆர்களையும் (reading, writing and arithmetic) பைபிளையும். தாமசின் தந்தை சாமுவேல் பழங்கதைகளைப் படிக்குமாறு ஊக்கப்படுத்தினார் - ஒவ்வொரு கதையை முடிக்கும் போதும் பத்து செண்ட்டுகளை அளிப்பதன் மூலம். விரைவில் தாமசு பல நூல்களைக் கற்றுத் தேர்ந்தார். கவிதைகளைப் படிப்பதிலும் பாடுவதிலும் அவருக்கு விருப்பம் அதிகமாயிருந்தது. நூலகத்திற்குச் சென்று அவருக்குத் தேவையான குறிப்புதவி நூலை அவரே எடுக்கக் கற்றுக்கொண்டபோது அவருக்கு வயது 11.
பன்னிரண்டாம் வயதில் அறிவியல் பக்கம் அவரது நாட்டம் குவிய ஆரம்பித்தது. தாமசின் கேள்விகளை அவரது பெற்றோரால் சமாளிக்க இயலவில்லை. நியூட்டனின் பிரின்சிப்பியாவைப் படிக்க ஆரம்பித்தார் தாமசு. இந்த வயதில் தான் தாமசின் ”விடாமுயற்சி” வெளிப்பட ஆரம்பித்தது. தாமசின் நிறையாகவும் குறையாகவும் இருந்தது அவரது குறைந்த கேட்குந்திறன்.
முதல் வேலை
1860களின் தொடக்கத்தில் எடிசனுக்கு இரயில் நிலையத்தில் தந்தி இயக்கும் வேலை கிடைத்தது; அதிவேகத் தந்தி இயக்குதலுக்குப் பேர்பெற்றவர் தாமசு. அவரது முதல் கண்டுபிடிப்புகள் மின்தந்தி போன்ற தந்தி தொடர்பான கருவிகளே - பின்னர் வெசுடன் யூனியன் அலுவலகத்தில் வேலை. வேலைக்கிடையில் தன் ஆய்வுகளைத் தொடர்ந்து வந்தார் எடிசன். ஆனால் ஒரு முறை காரீய-அமில சேமக்கலனை வைத்திருந்த போது அதிலிருந்த கந்தக அமிலம் வெளியில் கொட்டி, தாமசின் முதலாளி இருந்த அறைக்குள் பாய்ந்தது; அவரது வேலை பரிபோனது!
பிற வேலைகள்
இரயில்நிலையத்தில் நொறுக்குகளும் மிட்டாய்களும் விற்றார் சில காலம்; பன்றி வெட்டினார்; காய்கறி வணிகம் செய்தார். 1862 சமயம், ”த வீக்லி எரால்டு” என்ற வாரப் பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார்; அதுவும், ஓடும் இரயில் வண்டியிலிருந்த படியே! அக்டோபர் 28, 1868 அன்று முதல் காப்புரிமைக்கு (மின் வாக்குப்பதிவி) விண்ணப்பித்தார்.
முழுநேரக் கண்டுபிடிப்பாளராகத் தன் வாழ்க்கையை நடத்தும் பொருட்டு தாமசு நியூ செர்சியிலுள்ள நெவார்க்கிற்குச் சென்றார். பங்குச்சந்தைப் புள்ளிகளை தொடராகப் பதிவேற்றும் துடிநாடா, மேம்படுத்தப்பட்ட தந்திக்கருவிகள் ஆகிய கருவிகளை உருவாக்கினார். ஆனால் எடிசனுக்குப் பெயர் பெற்றுத்தந்த கருவி 1877-இல் அவர் ஆக்கிய ஒலிவரைவியே. அதன் பிறகே “மென்லோ பூங்காவின் மேதை” என்ற பட்டம் அவருக்கு வழங்கலாயிற்று.
No comments:
Post a Comment